Published : 29,May 2019 04:06 AM
அரசு பள்ளியில் ஆசிரியர் இல்லை: பாடம் நடத்த தொடங்கிய மாவட்ட ஆட்சியரின் மனைவி!

அரசு பள்ளி ஒன்றில் 5 வருடங்களாக இயற்பியல் ஆசிரியர் இல்லை என்பதால் மாவட்ட ஆட்சியரின் மனைவியே ஆசிரியராக பணிபுரிந்து மாணவர்களுக்கு உதவி வருகிறார்
ஐஏஎஸ் அதிகாரியான டேனியல் அஷ்ராப் கடந்த 2016ம் ஆண்டு, அருணாச்சல பிரதேசத்தில் அப்பர் சபன்சிரி மாவட்டத்துக்கு நீதித்துறை நடுவராகவும் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து அவரது மனைவியான ருகியும் டேனியல் உடனேயே தங்கி வந்துள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அப்பர் சபன்சிரி மிகவும் பின் தங்கிய மாவட்டம். இங்கு இணையவசதி, சாலை வசதி, ரயில் வசதி எதுவும் சரிவர கிடையாது. மழைக்காலங்களின் போக்குவரத்து என்பதே கடினம் என்ற நிலை.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள், தங்களுக்கு இயற்பியல் ஆசிரியர் கடந்த 5 வருடங்களாக இல்லை என டேனியலிடம் புகார் தெரிவித்துள்ளனர். மிகவும் பின் தங்கிய மாவட்டத்துக்கு ஆசிரியர் பணிக்கு வர யாரும் ஆர்வம் காட்டுவதில்லை என சக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்
இதற்கு தீர்வுகாண யோசித்த டேனியலின் மனைவி ருகி, தானே ஆசிரியராக இருப்பதாக தெரிவித்து பாடம் நடத்த தொடங்கியுள்ளார். புத்தகம் மூலம் பாடம் நடத்துவது மட்டுமின்றி யூ டியூப் வீடியோக்கள் மூலமும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கிறார் ருகி. அப்பர் சபன்சிரியின் இணையவசதி சரிவர இல்லை என்பதால் டெல்லி சென்று யூ டியூப் வீடியோக்களை தொகுத்து வந்து பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்
ருகியின் தன்னார்வ தொண்டால், கடந்த வருடம் வெறும் 17 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 92 மாணவர்களின் 74 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இயற்பியல் ஆசிரியர் ருகி குறித்து பேசிய மாணவர் ஒருவர், ''எங்களுக்கு புரியும் விதத்தில் எளிதாக பாடம் நடத்துவார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை அளித்தால் சாக்லெட்டுகள், பரிசுப்பொருட்கள் வழங்கி ஊக்கப்படுத்துவார். வாட்ஸ் அப்பிலும் குரூப் தொடங்கி அதன்மூலமும் சந்தேகங்களை தீர்ப்பார்’’ என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ருகி, ''நான் ஒரு பொறியியல் பட்டதாரி. கணவருடன் வசிப்பதற்காக வேலையைவிட்டேன். பள்ளியில் பாடம் எடுக்க தொடங்கியது எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. ஒவ்வொரு குடும்ப தலைவியும் இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.