Published : 14,May 2019 09:39 AM
“ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும்” - திருமாவளவன்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் “ முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அங்கு தொடங்குகிறது அது.
நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அந்தக் கொலைக்குப் பின்னணி கேட்க வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இது சமரச இந்தியாவாக சமமான இந்தியாவாக, மூவர்ண கொடியின் மூன்று நிறங்களும் அப்படியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன். அதனை மார்தட்டிச் சொல்வேன்” என்று குறிப்பிட்டார்.
கமலின் இந்தக் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். இதனிடையே, சிறுபான்மையின மக்களின் வாக்குகளைப் பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கமல்ஹாசன் உண்மையை பேசியதற்காக பாராட்டுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தேர்தல் பரப்புரையின்போது மதத்தை குறிப்பிட்டு பேசக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் விதிக்கு முரணான அவர் பேசியிருப்பது ஏற்புடையதல்ல எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் ‘இந்து’ எனக் குறிப்பிட்டிருக்க வேண்டாம் என்பதே தமது நிலைப்பாடு எனவும் திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார்.
கமல்ஹாசனின் கருத்தில் உடன்பாடு இல்லை என்றால் அதனை அமைச்சர் கண்டிக்கலாம். ஆனால் அதனைவிடுத்து அவரின் நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல; தண்டனைக்குரியதும் எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.
எனவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்வதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். இப்படி வன்முறையை தூண்டும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் தொடரச் செய்வது நியாயம் அல்ல எனத் தெரிவித்துள்ள தொல்.திருமாவளவன், அவரை அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்க தமிழக முதலமைச்சரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.