46 இடங்களில் மறு வாக்குப் பதிவு? - சிறப்பு அதிகாரியை நியமிக்க ஸ்டாலின் கோரிக்கை

46 இடங்களில் மறு வாக்குப் பதிவு? - சிறப்பு அதிகாரியை நியமிக்க ஸ்டாலின் கோரிக்கை
46 இடங்களில் மறு வாக்குப் பதிவு? - சிறப்பு அதிகாரியை நியமிக்க ஸ்டாலின் கோரிக்கை

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு மாற்றப்பட்ட விவகாரத்தில், மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் கோவையிலிருந்து 50 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனி நாடாளுமன்றத்  தொகுதிக்கும், 20 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டிருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் அதிகாரிகள் மற்றும் பல மாவட்டத் தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும் இருப்பதை தேர்தல் ஆணையம் சம்பந்தமே இல்லாததைப்போல கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

போட்டியிடும் வேட்பாளர் அல்லது அவருடைய முகவருக்குத் தெரிவிக்காமல் ஒரு தொகுதியிலிருந்து இன்னொரு தொகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றக் கூடாது என்று தெளிவான தேர்தல் ஆணைய விதிமுறைகள் இருந்தும்- அதை அப்பட்டமாக மீறி காலில் போட்டு மிதிக்கும் வகையில், தேர்தல் அதிகாரிகள் ஏதோ சில வேட்பாளர்களின் ஏஜென்ட்டுகள் போல, நடந்து கொள்கிறார்கள். அதைத் தட்டிக் கேட்க வேண்டிய தலைமைத் தேர்தல் அதிகாரியோ தேர்தல் அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சப்பைக் கட்டுக் கட்டி பேட்டிகளை வெளியிடுவதில் மட்டுமே அக்கறை காட்டுபவராக இருக்கிறார். 

 தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் மறு வாக்குப் பதிவு கோரி கொடுத்த தி.மு.க.வின் மனுவிற்கு இதுவரை எவ்வித தீர்மானமான உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில், 50 வாக்குப்பதிவு இயந்திரங்களை கோவையில் இருந்து தேனிக்கு மாற்றியது ஏன்? மறு வாக்குப் பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் அதன் பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்குப் பதில் உத்தரவே வராத நிலையில் ரகசியமாக வாக்குப் பதிவு இயந்திரங்களை தேனிக்கு கொண்டு சென்றது ஏன்? 

       
வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் குறித்து தி.மு.க. தரப்பில் புகார் கொடுக்கப்பட்டவுடன் இன்று பேட்டியளித்துள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி “தவறு செய்த 46 வாக்குச்சாவடி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று புதிய “விளக்கம்” கொடுக்கிறார். 46 வாக்குச்சாவடி அதிகாரிகள் தவறு செய்திருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிந்தவுடனோ அல்லது இந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனிக்கு மாற்றப்படும் வரையிலோ தலைமைத் தேர்தல் அதிகாரி வெளிப்படையாக அறிவிக்காதது ஏன்? 

ஆளுங்கட்சியின் தலையீடுகளின் காரணமாக, தமிழகத்தில் நிகழும் முறைகேடுகளுக்கு இடையே தலைமைத் தேர்தல் அதிகாரி தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு மிகவும் தடுமாறி நிற்கிறார் என்பது நன்கு தெரிகிறது. ஆகவே, எஞ்சியிருக்கும் நாட்களுக்கு உடனடியாக “மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி” ஒருவரை நியமித்து, தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு இயந்திரங்களையும், வாக்குப் பதிவு மையங்களையும் முழுமையான அளவிற்கு பாதுகாத்திட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com