Published : 02,May 2019 07:15 AM
பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவர் போக்சோவில் கைது

ஓமலூரில் 12-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சேலம் இளைஞரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் மக்கான் தெருவில் வசிக்கும் சரவணன்-இந்திரா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில், மூத்த மகள் ஓமலூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 27-ம் தேதி வீட்டில் இருந்த மகளை காணாமல் போனதால் பயந்துபோன பெற்றோர் மகளை தேடி பல இடங்களிலும் அலைந்தனர். ஆனால், எங்கும் கிடைக்கவில்லை. இந்த சுழலில் அவர்களுக்கு வந்த மர்ம தொலைபேசியில் உங்களது மகளை கடத்தி சென்று விட்டதாகவும், கடத்தியது சரவணனின் சகோதரி பழனியம்மாளின் மகன் கணேசன் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தனது மகள் கடத்தப்பட்டது, குறித்து இந்திரா ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் சேலம் பச்சப்பட்டியில் வசிக்கும் தனது உறவினர் மகன் கணேசன், தனது மகளை கடத்தி சென்று விட்டதாகவும், அதனால் அவனை கைது செய்து தனது மகளை மீட்டு கொடுக்குமாறும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால், புகார் கொடுத்து மூன்று நாட்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி சரவணன்-இந்திரா தம்பதியினர், அவர்களது உறவினர்கள் நூறு பேருடன் வந்து ஓமலூர் டி.எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து ஓமலூர் டி.எஸ்.பி சரவணன், காவல் ஆய்வாளர் அம்சவள்ளி தலைமையில் தனிப்படை அமைத்து மாணவியை கடத்திய கணேசனை பிடித்தனர். மேலும், அவனிடம் இருந்த மாணவியையும் மீட்டனர். மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளி மாணவியை கடத்தி கட்டாய திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கணேசன் மீது போக்சோ உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இளைஞரை கைது செய்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.