Published : 21,Apr 2019 02:27 AM
ஈஸ்டர்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவில் நடத்தப்பட்ட சிறப்பு பிரார்த்தனைகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புனிதவெள்ளியை தொடர்ந்து கல்லறையில் இருந்து இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் கிறித்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் வகையில் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அப்போது, பட்டாசுகள் வெடித்து ஈஸ்டர் பண்டிகை ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இதேபோல் தூத்துக்குடி புனித பனி மய மாதா தேவாலாயம் உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையுடன் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. புதுச்சேரியில், ஜென்மராக்கினி ஆலயம், இருதய ஆண்டவர் பசிலிக்கா ஆலயம், நெல்லித்தோப்பு விண்ணேற்பு மாதா ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட பலர் ஈஸ்டர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.