Published : 19,Apr 2019 01:31 PM

பொன்னமராவதி உள்பட 30 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு  

Section-144-imposed-in-pudhukottai-villages

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலையத்தில் நேற்று ஒரு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த மர்ம நபர்கள் இருவர் எங்கள் சமுதாய மக்களை இழிவு படுத்தி வாட்ஸ் ஆப்பில் பேசியதாகவும், அந்த வாட்ஸ் ஆப் உரையாடலில் பேசிய அந்த இரண்டு நபர்களையும் உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் பொன்னமராவதி காவல் நிலையத்தை சுமார் 500 க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டமும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பொன்னமராவதியில் இன்று போராட்டம் தீவிரமடைந்தது. பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு குறிப்பிட்ட  சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, பொன்னமராவதி முழுவதும் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டது. 

தொடர்ந்து போராட்டமும் பதட்டமும் நிலவி வருவதால்  பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் 144 உத்தரவு பிறப்பித்துள்ளார்.