Published : 14,Apr 2019 04:42 PM
“சீண்டும் தொண்டர்களை கட்டுப்படுத்தி வையுங்கள்” - சீமானுக்கு ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை

தனக்கும், தன்னுடைய ரசிகர்களுக்கும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் தொடர்ச்சியாக தொந்தரவு அளித்து வருவதாக நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ராகவா லாரன்ஸ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றினை எழுதியுள்ளார். அந்த பதிவில், நாம் தமிழர் கட்சியை நேரடியாக குறிப்பிடாமல், அவர்களது தொண்டர்கள் தமக்கும், தன்னுடைய மாற்றுத்திறனாளி பசங்களுக்கும் தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். அதில், “உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் எனது சேவை சம்பந்தப்பட்ட பதிவுகள் போடப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற வலைதளங்களில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில்..... தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், அசிங்கமாகவும் நாலாந்தர நடையில் பதிவிடுகிறார்கள்! அது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.
ஏதேனும் பொது நிகழ்ச்சிகளுக்கு நான் போகும்போது கூட உங்களது ஒரு சில தொண்டர்கள் அங்கு வந்து மிகவும் நாகரீகமற்ற முறையில் மறைமுகமாக பேசுகிறார்கள்!. இவையெல்லாம், எப்பொழுது நீங்கள் மேடையில் என்னைப் பற்றி தவறாக பேசினீர்களோ, அப்பொழுதிருந்தே நடந்து வருகிறது.. நான் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை! ஆனால்.... மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க, நிகழ்ச்சி நடத்த எங்கு சென்றாலும், அவர்களை சொல்லொண்ணா வார்த்தைகளாலும் செயல்களாலும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மனம் புண்படும்படி பேசுகிறார்கள்!
எனக்கு எது நடந்தாலும் அதைத் தாங்கிக் கொள்வேன்! ஆனால்... மாற்றுத்திறனாளிகளான என் பசங்களுக்கும் பாசமிக்க எனது ரசிகர்களுக்கும், ஏதாவது ஒரு சிறு தொந்தரவு ஏற்பட்டாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது” என லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவின் ஓரிடத்தில், “அரசியலில் இப்பொழுது கூட நான் ஜீரோவாகத்தான் இருக்கிறேன், அதில் "ஹீரோவாக்கி" என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள்” என கூறியுள்ளார். அந்த பதிவின் இறுதியில், “சமாதானமா? சவாலா? முடிவை நீங்களே எடுங்கள்! சாய்ஸ் யுவர்ஸ்...!” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தென்சென்னை வேட்பாளர் ஷெரினை ஆதரித்து கந்தன்சாவடியில் பிரச்சாரப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, ராகவா லாரன்ஸ் அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அதைப்பற்றி நான் கேள்விப்படவில்லை.. என் பெயரை வைத்து பலரும் பொய்யான வதந்திகளை பரப்பப்படுகின்றனர்” என தெரிவித்தார்..