“எஸ்.பியை விசாரணை செய்ய சொன்னதே நான்தான்” - பொள்ளாச்சி ஜெயராமன்

“எஸ்.பியை விசாரணை செய்ய சொன்னதே நான்தான்” - பொள்ளாச்சி ஜெயராமன்
“எஸ்.பியை விசாரணை செய்ய சொன்னதே நான்தான்” - பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கும் தனது குடும்பத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனச் சட்டமன்றத் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயராமன், “முதன்முதலாக இந்தச் சம்பவத்தை வெளிச்சம் போட்டு காட்டியவன் நான்தான். நான் தான் எஸ்.பிக்கு அந்தத் தகவலை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி விசாரனை செய்ய சொன்னேன். ஆனால் திமுக தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், இதன்மூலம் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஒரு கெட்ட பெயரை உண்டாக்க வேண்டும் என நினைக்கிறார்கள். தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரே தொலைக்காட்சியில் பேட்டி கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். 

இதையெல்லாம் தூண்டி விடுவது மு.க.ஸ்டாலினின் மகன் சபரீசன்தான். எப்படி இதை சொல்கிறேன் என்றால், எந்தச் செய்தியும் எந்தப் பத்திரிகையிலும் வெளிவராத நிலையில், என்னுடைய புகைப்படத்தைப்போட்டு ‘இதில் அரசியல் கட்சி பிரமுகரின் இரு மகன்களுக்கு தொடர்பு இருக்கிறது’ என சொன்னால், இது எவ்வளவு பெரிய பொய் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 

இதெல்லாம் திமுகவிற்கு கைவந்த கலை. கீழ்த்தரமான செயல். என்னுடைய குடும்பத்தை பொறுத்தவரை பொள்ளாச்சி வட்டாரத்தில் மட்டுமல்ல கோவை மாவட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் இருக்கிற மக்களுக்கு எனது குடும்பத்தை பற்றி நன்றாக தெரியும். இந்தக் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கு யார் காரணமாக இருந்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும். பாதிக்கப்பட்டவர்கள் இதைப்பற்றி சொல்வதற்கு தயாராக உள்ளனர். இப்படிப்பட்ட பொய்யான தகவலை பரப்பக்கூடாது என்பதற்கும் நாங்கள் தேர்தல் ஆணையத்திலே இன்று கோரிக்கை வைத்துள்ளோம். சமூக வலைத்தளங்களிலும் இதுபோன்ற தகவல்களை பரப்பக்கூடாது எனத் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்துள்ளோம். 

போலீஸ், சிபிஐ விசாரணை வைத்தாலும் சரி, இண்டர்போல் விசாரணை வைத்தாலும் சரி இதிலே சிக்கப்போவது யார் என்றால், திமுக மாவட்டச்செயலாளர் தென்றல் செல்வாரஜ் மகனின் நெருக்கமான நண்பன் தான். அவர்கள் இருவருக்கும் நீண்ட காலமாக நட்பு உள்ளது. இதில் யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் விசாரித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சம்பவத்திற்கும் எனது கும்பத்தாருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” எனத் தெரிவித்தார்.     

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com