
இந்தியாவில் பிரதமர் மோடியை தவிர, பிரதமராகும் தகுதி வேறு யாருக்கு இல்லை என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கிளாம்பாக்கத்தில் நடைபெற்று வரும் கூட்டணி கட்சிகள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “இந்தியா முழுவதும் எத்தனையோ தேசியத் தலைவர்கள் இருக்கிறார்கள். 130 கோடி மக்கள் இருக்கிறார்கள். ஆனால் அதில் பிரதமராக இருக்கு தகுதி கொண்டவராக எங்கு பார்த்தாலும் பிரதமர் மோடி தான் தெரிகிறார்.
அண்மையில் காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் 40 வீரர்கள் இறந்தனர். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நமது பிரதமரின் நடவடிக்கையால், பயங்கரவாதிகள் முகாம் கூண்டோடு ஒழிக்கப்பட்டது. நமது விமானப்படை விமானி அபிநந்தன் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொண்டார். அவரை மீட்டு வரலாறு படைத்தவர் பிரதமர் மோடி. மத்தியிலும், மாநிலத்திலும் திறமையான ஆட்சி நடைபெறுவதால் விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது.
காவிரி-கோதாவரியை இணைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி நிறைவேற்றி தரவேண்டும் என்பதைக் கேட்டுக்கொள்கிறேன். அப்படி அவர் செய்தால், தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடிப்பார். உழைக்கும் விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவி கொடுப்பது தவறா ? திமுக-காங்கிரஸ் 10 ஆண்டுகளுக்கு மேலாக மத்தியில் கூட்டணியில் ஆட்சி செய்தார்கள். ஆனால் தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. கொள்ளை தான் அடித்தார்கள். நம்முடைய கூட்டணி மெகா கூட்டணி. இயற்கையான கூட்டணி. இதைப் பார்த்து ஏன் இப்படி பயப்படுகிறார்கள் எனத் தெரியவில்லை” என்று கூறினார்.