Published : 23,Feb 2019 10:34 AM

7 பேர் விடுதலைக்கு இது சாதகமான சூழல் - முதல்வர் பழனிசாமிக்கு நளினி கடிதம்

Nalini--one-the-convicts-of-Rajiv-Gandhi-killing-case-has-written-a-letter-to-TN-CM-Edapadi-Palanisamy-to-release-7-convicts-from-the-prison-at-the-earliest

7 பேர் விடுதலைக்கு இது சாதகமான சூழல் என்று முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளி நளினி வலியுறுத்தியுள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு சட்டப்பேரவையில் 2014 இல் தீர்மானம் நிறைவேற்றியது. அதனை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில், முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

             

தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினியை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. நளினி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் உயர்நீதிமன்றம் இதே கோரிக்கையில் தலையிட முடியாது எனவும் கூறிவிட்டது.

இதனையடுத்து, 7 விடுதலை பேர் தொடர்பாக தமிழக அரசு கோரிக்கை வைக்கும் பட்சத்தில், அதனை ஆலோசனை செய்து ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது. ஆனால், தமிழக அரசு மனு அளித்தும் ஆளுநர் தரப்பில் இன்னும் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், ஆளுநரிடம் வலியுறுத்தி 7 பேரையும் முன்கூட்டியே விடுவிக்க உதவ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறையிலுள்ள நளினி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘தற்போதைய அரசியல் சூழல் 7பேரின் விடுதலைக்கு சாதகமாக நிலவுவதால் உதவ வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

            

மேலும் அந்தக் கடிதத்தில்,“கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி அமைச்சரவை கூடி முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பிய 7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரை இன்னும் கிடப்பிலே உள்ளது. இந்தியாவிலே அதிக ஆண்டுகள் சிறையிலுள்ள பெண் நான். நாங்கள் 7 பேரும் 27 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்துவிட்டோம். அரசிடம் இருந்து உத்தரவு வரும் என்று ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறோம். ஆனால், ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்ற செய்தியால், தினமும் ஏமாற்றமே மிஞ்சுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.  

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்