
திமுக-காங்கிரஸ் இடையேயான மக்களவை தேர்தல் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையை தேசிய, மாநில கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழகத்தில் தற்போது வரை அதிமுக- பாமக இடையே கூட்டணி உறுதியாகி உள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சி மொத்தமாக 15 மக்களவை தொகுதிகளை கேட்டதாக சொல்லப்படும் நிலையில், தமிழகத்தில் 9 தொகுதிகளையும்,
புதுச்சேரியில் ஒரு தொகுதியையும் ஒதுக்க திமுக தலைமை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் “மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை சென்னையில் அறிவிக்கப்படும். அதிமுகவுடன் பாமக கூட்டணி சேர்ந்தது வருத்தம் அளிக்கிறது. வரலாற்று பிழையை பாமக செய்துவிட்டது. அதிமுக மீது ஊழல் புகார்களை அளித்த பாமக அதற்கெல்லாம் இப்போது என்ன சொல்ல போகிறது. மேலும் பாமக ஒரே நேரத்தில் திமுகவுடனும், அதிமுகவுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது” எனத் தெரிவித்தார்.