
மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் குழந்தை கடத்துவதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரவி வந்தது. நாடு முழுக்க இந்த வதந்தியால் 24 பேர் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வுகள் அரங்கேறின. குழந்தை ஒன்று சாக்லேட் கேட்டதால் அன்போடு கொடுத்த ருக்மணி என்ற பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியது.
மிக நீண்ட விழிப்புணர்வுக்கு பின் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தன. ஆனால் அவ்வப்போது வடமாநில இளைஞர்கள் மற்றும் தொழிலாளிகளை தாக்கும் சம்பவம் தமிழகத்தில் நடந்தே வருகிறது. இந்நிலையில் நேற்று வேலூரில் திருட வந்ததாக கூறி வடமாநிலத்தை சேர்ந்த ஒருவரை அடித்துக் கொன்ற சம்பவம் வேலூரில் நடந்துள்ளது.
கே.வி.குப்பம் அடுத்த கோசவன் புதூர் பகுதியில் உள்ள கலாநாதன் நாயுடு என்பரின் வீட்டு கதவை நேற்று நள்ளிரவு சந்தேகத்திர்கிடமாக வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த 3 பேரை தட்டியுள்ளனர். சந்தேகம் அடைந்த கலாநாதன் போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்களை பார்த்ததும் 3 பேரும் ஓட ஆரம்பித்துள்ளனர். இவர்களை விரட்டி பிடிக்கும் போது குஜனன் கர்பாலியா(36) என்வரை பிடித்து திருட வந்ததாக கூறி மரத்தில் கட்டிப்போட்டு பொது மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பொதுமக்கள் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே குஜனன் கர்பாலியா உயிரிழந்துள்ளார். எப்படியும் காவல்துறை விசாரணை நடந்தால் மாட்டிக் கொள்வோம் என உணர்ந்த மக்கள் , இதனை மறைக்க நினைத்தனர். இதையடுத்து சம்பவம் வெளியில் தெரியாமல் இருக்க உடலை அருகில் உள்ள கிணற்றில் வீசியுள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த கே.வி.குப்பம் காவல் துறையினர் கிணற்றில் இருந்து சடத்தை மீட்டு விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.