Published : 08,Jan 2019 01:46 PM

பாஜக பிரமுகர் கோயில் விழாவில் மதுபாட்டில்கள் விநியோகம்

Liquor-bottles-in-food-packets-served-at-uttar-pradesh-bjp-lawmaker-event

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை சேர்ந்த ஒருவர் கோயிலில் வைத்து நடத்திய நிகழ்ச்சியில் மதுபாட்டில்கள் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹார்டோய் பகுதியில் உள்ள ஷ்ரவண தேவி கோயிலில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாஜகவைச் சேர்ந்த நிதின் அகர்வால்தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததோடு அதனை தொகுத்தும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. அதனை பிரித்து பார்த்த மக்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. காரணம், உணவுப் பொட்டலத்திற்குள் உணவுடன் மதுபாட்டில்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இதனை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நிதின் அகர்வாலின் தந்தையான நரேஷ் அகர்வால் சமீபத்தில்தான் சமாஜ்வாதி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்திருந்தார். அவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹார்டோய் தொகுதி பாஜக எம்.பியான அன்சுல் வர்மா இது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம் எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இதுதொடர்பாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், நிதின் அகர்வால் பங்கேற்ற நிகழ்ச்சியில் மதுபாட்டில்கள் வழங்கப்பட்டது தொடர்பாக கட்சியின் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக கூறினார். இந்தப் பிரச்னையை சரிசெய்ய பாஜக இதுகுறித்து மீண்டும் ஒருமுறை சிந்திக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருசில சிறுவர்களுக்கு கூட மதுபாட்டில்கள் வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக நரேஷ் அகர்வாலும், அவரது மகனும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்