
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய பிச்சை எடுக்கவும் தயாராக இருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆயிஷா. அரியவகை மரபு நோயான வில்சன்ஸ் நோயினால் இந்த சிறுமி பாதிக்கப்பட்டார். அவரது நோயை குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
சிறுமி ஆயிஷா பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் சமூக வலைதளங்கள் மூலம் அவரின் அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டப்பட்டது. இதனையடுத்து ஆயிஷாவுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 8 வயதான ஆயிஷாவுக்கு சுமார் 8 மணி நேர தொடர் சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு ஆயிஷா நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஷால், ஆதரவற்ற குழந்தைகளை அரவணைக்கவும், உடல் உறுப்புகளை தானமாக அளிக்கவும் அனைவரும் முன்வரவேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய விஷால் ”கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க அனைவரும் முன்வர வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக நிவாரணம் என்பது மட்டும் முக்கியம் இல்லை. முடிந்தவரை அவர்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப நாம் அனைவரும் உதவ வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய பிச்சையெடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்