Published : 01,Nov 2018 01:17 PM

“பாஜகவை வீழ்த்துவதே குறிக்கோள்” - ராகுலுடன் சந்திரபாபு நாயுடு கூட்டணி

We-Are-Coming-Together--Says-Rahul-Gandhi-After-Meeting-Chandrababu-Naidu

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொருட்டு ஒன்று சேர்ந்துள்ளதாக ராகுல் காந்தியும், சந்திரபாபு நாயுடுவும் கூறியுள்ளனர். 

ஆந்திர மாநில முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை செய்தனர். 

பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, “நமது நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியிருக்கிறது. நாட்டில் உள்ள சிபிஐ போன்ற அமைப்புகளை பாதுக்காக்க வேண்டியுள்ளது. அதேபோல், நாட்டின் எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. அதற்காக நாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளோம். இந்தியாவை பாதுகாக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நாங்கள் கடந்த காலத்தைப் பற்றி பேசவில்லை. நிகழ்காலத்தில் நடப்பது பற்றியும், எதிர்க்காலத்தை பற்றியும் பேசினோம். ஏனெனில் நாடு தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது” என்று கூறினார். 

  

பின்னர் பேசிய சந்திரபாபு நாயுடு, “நாம் நம்முடைய நாட்டை பாதுகாக்க வேண்டியுள்ளது. எங்களுடைய கடந்த காலத்தைப் பற்றி நீங்கள் கேள்வி எழுப்பக் கூடும். நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு ஜனநாயகத்தின் தேவையே இது. நாட்டினை பாதுகாப்பதற்கு நாங்கள் சேர வேண்டியுள்ளது. காங்கிரஸ் நாட்டின் மிகப்பெரிய கட்சி. அதனுடன் கூட்டணி அமைக்கிறோம். இது இரண்டு கட்சிகள் சேர்வதாக நினைக்க வேண்டாம். பாஜகவுக்கு எதிரான கட்சிகள் சேர்ந்துள்ளதாகதான் கருத வேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேச இருக்கிறோம்” என்றார்.

                

2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி இடம்பெற்றிருந்தது. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் முரண்பட்ட சந்திரபாபு நாயுடு, அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறினார். பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானமும் தெலுங்கு தேசம் கொண்டு வந்தது. இதனிடையே, மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வந்தார். மம்தா உள்ளிட்டோரும் இதே முயற்சியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், தெலுங்கானாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு எதிராக அம்மாநில காங்கிரஸ் கட்சி உடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்தது. இருப்பினும், மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து சந்திரபாபு நாயுடு வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்துவந்தார். 

            

இந்நிலையில், டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்த சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கூட்டணியை உறுதி செய்துள்ளார். பாஜக எதிர்ப்பு என்ற தளத்தில் இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரை டெல்லியில் இன்று சந்தித்திருந்தார் சந்திரபாபு நாயுடு. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்