Published : 09,Sep 2018 06:32 AM
ரயிலில் இரவு தூக்கத்தில் களவாடப்பட்ட 32 சவரன் தங்க நகைகள் !

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் 32 சவரன் நகை மற்றும் ரூ. 65 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. ஆந்திராவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பினார். சென்னைக்கு சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் தூங்கியபடி வந்துள்ளார். அப்போது அந்தப் பெண் கழுத்தில் அணிந்திருந்த 30 சவரன் தங்க நகைகள், ரூ. 65 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு எழும்பூர் ரயில் நிலையம் வந்து விழித்து பார்த்த போது தான் விஜயலட்சுமிக்கு நகைகள் திருடு போனது தெரியவந்தது. ரயில் நிலையத்தில் காத்திருந்த அவரது கணவர் ராமநாதனிடம் இது குறித்து தெரிவித்தார். பிறகு எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திரா ரயில்வே போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. நகையை பறி கொடுத்த விஜயலட்சுமி தற்போதைய ஏடிஜிபி ஒருவரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.