Published : 23,Aug 2018 03:09 AM
இங்கிலாந்து அணியை வீழ்த்தியது எப்படி? பும்ரா

காயமடைந்திருந்தாலும் கூட கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதால் சிறப்பாக பந்துவீச முடிந்தது என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்திடம் இழந்த இந்திய அணி, நாட்டிங்ஹாமில் நடந்த மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது. காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் இடம்பெறாத பும்ரா, மூன்றாவது போட்டியில் இடம்பெற்றிருந்தார்.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 329 ரன்கள் எடுத்தது. கேப்டன் கோலி 97 ரன்களும் ரஹானே 81 ரன்களும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பட்லர் 39 ரன்கள் சேர்த்தார். ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
அடுத்து 168 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. கேப்டன் கோலி சதம் அடித்து அசத்தினார். அதன்பின் 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 317 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால், இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 விக்கெட் வீழ்த்தினார் பும்ரா.
வெற்றிக்குப் பின் பேசிய பும்ரா கூறும்போது, ’காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியதில் மகிழ்ச்சி. நாங்கள் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டை வீழ்த்தினோம். போட்டியில் எப்போதும் அழுத்தம் இருந்துகொண்டுதான் இருக்கும். சில நேரம் விக்கெட் கிடைக்கலாம். சில நேரம் மற்ற பந்துவீச்சாளருக்கு கிடைக்கலாம். ஆனால், தொடர்ந்து சிறப்பாக பந்துவீச வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். அதைச் சரியாக செயல்படுத்தினோம். காயத்தில் இருந்து அணிக்குத் திரும்பி வரும்போது கடினமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். நான் திரும்பி வந்து என்னை உறுதிபடுத்திக்கொண்டேன். என்னால் மீண்டும் சிறப்பாக பந்துவீச முடிந்ததில் மகிழ்ச்சி. வேகப்பந்துவீச்சாளருக்கு இது எளிதான விஷயமல்ல. காயமடைந்திருந்தாலும் கூட கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டேன். டிரைனர்களிடம் தொடர்ந்து ஆலோசித்துக்கொண்டே இருந்தேன். பிறகு இங்கிலாந்துக்கு வந்ததில் இருந்தே பயிற்சிகளை மேற்கொண்டிருந்தேன். அதனால்தான் என்னை பழைய நிலைக்கு திரும்ப முடிந்தது.
பந்துவீச்சாளர்கள் நாங்கள் திட்டம் வைத்திருந்தோம். அதன்படி எந்த இடத்தில் பந்தை பிட்ச் செய்து விக்கெட்டை வீழ்த்துவது என்பது பற்றி முடிவு செய்தோம். அந்த திட்டத்தை நாங்கள் சரியாக செயல்படுத்தினோம். இஷாந்த் சர்மாவும் சிறப்பாக பந்துவீசினார்.
முதல் போட்டியில் வெற்றியின் அருகில் வந்து தோற்றோம். இரண்டாவது போட்டியில் சீதோஷ்ணநிலை கடினமாக்கியது. இந்த போட்டியில் வென்றுவிட்டோம். அடுத்தப் போட்டியிலும் வெல்லும் நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.