
கரூரில் காவிரியாற்றில் 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதிகப்படியான நீர், காவிரி கரையோரம் உள்ள சுமார் 150 ஏக்கர் விளைநிலங்களில் புகுந்துள்ளது. வாழை, தென்னை மரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது மட்டுமல்லாது 95 வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
கரூரில் காவிரியாற்றில் கடந்த சில தினங்களாக மேட்டூர் அணையிலிருந்து வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாது, பவானி, நொய்யல், அமராவதி ஆகிய ஆறுகளின் நீர் பிடிப்பு பகுதியிலும் நல்ல மழை பெய்து வருவதால் இந்த ஆறுகளில் வரும் மழை வெள்ள நீர் காவிரியாற்றில் கலந்து கரூர் மாயனூர் கதவணைக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த கதவணைக்கு முன்பாக உள்ள காவிரி கரையோரம் மாயனூர், மேல மாயனூர், ரெங்கநாதன்புரம், கட்டளை, கட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் விளை நிலங்கள் உள்ளன. இந்த விளைநிலங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இந்த விளைநிலங்களில் உள்ள வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டுள்ள நிலங்களை வருவாய்த்துறையினர் கணக்கெடுப்பு எடுத்து வருகின்றனர்.