Published : 13,Aug 2018 07:55 AM
மழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு!

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத கன மழையால் கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கேரள மக்களுக்கு உதவுவதற்காக தமிழ் நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.25 லட்சமும் கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கம் முதற்கட்டமாக, ரூ.5 லட்சம் வழங்கியிருக்கிறது. கேரள மாநில, நடிகர் விஜய் ரசிகர் மன்றமும் உதவி செய்துள்ளது.
இந்நிலையில் கேரள நடிகர்கள் சங்கமான ’அம்மா’, ரூ10 லட்சத்தை நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. பெரும்பாலான கேரள, நடிகர், நடிகை கள் நிவாரண நிதி கொடுக்கவில்லை. இதையடுத்து அவர்களுக்கு கேரளாவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. சமூக வலைத்தளங்களில் அவர்களை விமர்சித்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதில், ‘மலையாள நடிகர் சங்கத்தில் 400 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். ஆனால் வெறும் 10 லட்சம் மட்டுமே நிவாரண நிதி வழங்கப்பட்டிருக்கிறது. மலையாள நடிகர், நடிகைகள் யாரும் தனிப்பட்ட முறையில் நிவாரண நிதி வழங்கியதாகத் தெரியவில்லை. இது அவர்களின் கஞ்சத்தனத்தைக் காட்டுகிறது’ எனத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மலையாள நடிகர், நடிகைகளுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்னும் சிலர், ‘நயன்தாரா, ரம்யா நம்பீசன், மஞ்சு வாரியர் உட்பட ஏராளமான ஹீரோயின்களும் ஹீரோக்களும் பல மொழிகளில் நடித்து வருகின்றனர். அவர்கள் இதுவரை எதுவுமே நிவாரண நிதி அளிக்காதது வருத்தமாக இருக்கிறது’ என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த எதிர்ப்பு வலுத்ததை அடுத்து நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி ஆகியோர் தலா ரூ.25 லட்சத்தை வழங்கியுள்ளனர்.
===============================================================================
You Can also Watch
கருணாநிதியின் இரங்கல் கூட்டத்தில் ரஜினி பேச்சு