Published : 11,Aug 2018 08:22 AM
சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையம் அனைத்தும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
72-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு சார்பில் சுதந்திர தின விழா நடைபெறும் இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். இதேபோல் அந்தந்த மாநில தலைநகரங்களில் சுதந்திர தின விழாக்கள் கோலாகலமாக நடைபெற உள்ளன. இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவு 12 மணி முதல் 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்படுள்ளது. பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வரும் 22-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.