Published : 09,Aug 2018 04:52 PM
அம்பயரிடம் பந்தை வாங்கியது ஏன்? - ரகசியத்தை உடைத்தார் தோனி..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அம்பயரிடம் இருந்து பந்தை வங்கியது குறித்து தோனி விளக்கம் அளித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோனி 3 வது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்தது. போட்டி முடிந்து வீரர்கள் பெவிலியன் திரும்பிக்கொண்டிருந்தபோது, அம்பயர்கள் ஸ்டீவ் ஆக்ஷன்போர்ட் (ஆஸ்திரேலியா), மைக்கேல் கோஹ் (இங்கிலாந்து) ஆகியோரிடம் இருந்து பந்தை கேட்டு வாங்கினார் தோனி. இதனையடுத்து, தோனி பந்தை வாங்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
பொதுவாக போட்டி தொடரை வென்றாலோ, அல்லது சிறப்பாக பந்து வீசினாலோ வீரர்கள் ஸ்டம்ப் அல்லது பந்தை நினைவாக எடுத்து செல்வது வழக்கம். அதன்படி தோனி, பந்தை வாங்கியதால் அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற போகிறார் என்று பரபரப்பாக விவாதிக்கத் தொடங்கினர். ஒரு தொடரில் 2வது போட்டியில் 59 பந்துகளில் 37 ரன்னும், கடைசிப்போட்டியில் 66 பந்துகளில் 42 ரன்னும் எடுத்தார். தோனியின் மந்தமான ஆட்டம் விமர்சனத்திற்கு உள்ளானது. அதனால், தோனி ஓய்வை அறிவிக்கப் போகிறார் என்பது போல் மீம்ஸ்கள் ட்விட்டரில் பறந்தன.
தோனி பந்தினை வாங்கியது குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், தோனி அப்போது எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. ஒருநாள் தொடர் முடிந்து தற்போது அவர் இந்தியா திரும்பிவிட்டார்.
இந்நிலையில், நடுவரிடம் இருந்து பந்தை வாங்கியதற்கான காரணம் குறித்து தோனி பேசியுள்ளார். இதுகுறித்து தோனி பேசுகையில், “இங்கிலாந்தில் உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், அந்த மைதானத்தில் பந்து எப்படி ஸ்வீங் ஆகும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எதிரணியினர் அந்தத் தன்மையை தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால், நாமும் அதனை தெரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் பந்தினை நடுவரிடம் இருந்து வாங்கினேன்.
50 ஓவர்கள் முடிந்த பிறகு அந்தப் பந்து ஐசிசிக்கு தேவையற்றது. அதனால், நடுவரிடம் இருந்து பந்தினை கேட்டு வாங்கினேன். அதனை நமது பவுலிங் கோச்சிடம் கொடுத்தேன். அவரிடம் அந்தப் பந்து எப்படி ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது என்பதை சோதிக்க வேண்டும் என்று கூறினேன்.
அந்தப் பந்து எப்படி ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது என்பதை தெரிந்து கொள்வது 40 ஓவர்களுக்கு பின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு யார்க்கர் பந்து போடுவதற்கும், விக்கெட் எடுப்பதற்கும் உதவும். கடைசி 10 ஓவர்களில் எதிரணியை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை அறிந்து கொள்ள அது உதவும்”எனக் கூறினார்.