Published : 09,Aug 2018 08:55 AM

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள அனுமதி

Allowed-administrative-work-in-Sterlite-Plant

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது கடந்த மே மோதம் 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, “ஆலையை 30 நாட்கள் இயக்குகிறோம். மாசு ஏதேனும் ஏற்படுகிறதா என்று நீங்களே குழு அமைத்து கண்காணியுங்கள்” என வேதாந்தா குழுமம் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

இதனையடுத்து நிர்வாக வேலைகளுக்காவது ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என வேதாந்தா குழுமம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஊழியர்களின் சம்பள பாக்கி உள்ளிட்ட விஷயங்களை முன்வைத்து வேதாந்தா குழுமம் இந்த கோரிக்கையை வைத்தது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மட்டும் மேற்கொள்ள ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. ஆலையை இயக்க அனுமதி இல்லை எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்