'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது' - போர்டு திட்டவட்டம்
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க இயலாது என்று உச்சநீதிமன்றத்தில் திருவாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலையில் பெண்களையும் வழிபட அனுமதிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த விசாரணையில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், இறைபக்தியில் ஆண், பெண் என்ற வேற்றுமை பார்க்க இயலாது என்றும், தங்களுக்கு விருப்பமான கோயிலில் வழிபட பெண்களுக்கு அரசியல் சட்டத்தின்படி உரிமை இருப்பதாகவும் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றம் அளிக்கும் உத்தரவின்படி செயல்படத் தயாராக இருப்பதாக கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றபோது, தேவசம் போர்டு தரப்பில் வாதிடப்பட்டது. சபரிமலை கோயிலின் ஆகம விதிகளின்படி மாதவிடாய் பருவத்தில் உள்ள பெண்களை அனுமதிக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டது. பாரம்பரிய வழிபாட்டு முறைகளின் நடைமுறைகளை மாற்ற இயலாது என்று குறிப்பிட்டது. அத்துடன் 10 முதல் 55 வயதுக்கு உட்பட்ட பெண்களை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்றும் தேவசம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.