ஸ்டெர்லைட்டுக்கும் பாஜகவுக்கும் தொடர்பிருக்கிறது !

ஸ்டெர்லைட்டுக்கும் பாஜகவுக்கும் தொடர்பிருக்கிறது !
ஸ்டெர்லைட்டுக்கும் பாஜகவுக்கும் தொடர்பிருக்கிறது !

‘ஸ்டெர்லைட் ஆலைக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை கூறியிருக்கிறார். இது உண்மைக்கு மாறான ஒரு கூற்றாகும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு வழி வகுத்ததே பா.ஜ.க. அரசின் கொள்கைதான். 


வேதாந்தா நிறுவனத்தின் ஒரு அங்கமான ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடியில் தாமிர உருக்காலையை நடத்தி வருகிறது. நாளொன்றுக்கு 1200 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் அந்த ஆலை கடந்த 22 ஆண்டுகளாக அங்கு செயல்பட்டு வருகிறது. அது துவக்கப்பட்ட நாள் முதலே மக்கள் அந்த ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகளையும், நோய்களையும் குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அந்த ஆலையின் விரிவாக்கத்திற்கு அனுமதி கோரப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மக்கள் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதையும் மீறி ஸ்டெர்லைட் நிறுவனம் கட்டுமானப் பணிகளை நடத்திக்கொண்டிருந்தது. அதற்குக் காரணம் பாஜக அரசு தந்த ஒரு விளக்கம்தான்.

காங்கிரஸ் ஆட்சியும் சுற்றுச்சூழல் சட்டங்களும்

இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் முக்கியமான சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் யாவும் காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் உருவாக்கப்பட்டவைதான். 1986ல் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் ;2006 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கை; 2010 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்டம் ஆகியவற்றை சில உதாரணங்களாகக் கூறலாம். இந்தச் சட்டங்களின் காரணமாகவே பெரிய தொழிற்சாலை ஒன்றைத் தொடங்குவதற்கு முன்பு அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் எவை என்பதைப்பற்றிய அறிக்கையைத் (Environment Impact Assessment Report ) தாக்கல் செய்யவேண்டும், மக்களின் கருத்தறியும் கூட்டத்தை (Public Hearing ) நடத்த வேண்டும் என்பவை கட்டாயமாக்கப்பட்டன. 

பாஜக அரசு அளித்த சட்டவிரோத விளக்கம் 

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் எந்தவொரு நிறுவனமும் தொழிற்சாலையை ஆரம்பிக்க முடியாத நிலை இருந்தது. ஆனால், அந்த ஆட்சி முடிந்து நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பிறகு மத்திய அரசின் நிலைபாட்டில் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அதன் காரணமாக மோடி அரசு பதவியேற்று முதல் ஆறு மாதங்களிலேயே 650 தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்பட்டது. அதைத் தங்களது ஆட்சியின் சாதனை என அன்றைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பெருமை பட்டுக்கொண்டார். 

மோடி அரசு பதவியேற்றதும் சுற்றுச்சூழல் சட்டங்களில் மாற்றம் செய்வதற்காக டிஎஸ்.ஆர்.சுப்ரமணியம் என்பவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தியாவிலுள்ள ஆறு சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்களிலும் திருத்தங்கள் செய்யப்பட்டன. அத்தகைய திருத்தங்கள் செய்யப்படுவதற்கு முன்பே 2014 டிசம்பர் மாதத்தில் பா.ஜ.க. அரசு சுற்றுச்சூழல் சட்டத்துக்குப் புதிய விளக்கம் ஒன்றை அளித்தது. அதன் காரணமாகவே ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பொதுமக்கள் கருத்தறியும் கூட்டத்தை நடத்தாமலேயே தொழிற்சாலைகளைத் துவங்குவதற்கான வாய்ப்பைப் பெற்றன.

2006 ஆம் ஆண்டைய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அறிவிக்கையின் ( EIA) பத்தி 7(i) III. Stage (3) (i) (b)க்கு மன்மோகன் சிங் அரசு விளக்கமொன்றை அளித்திருந்தது. தொழில் பூங்கா ஒன்றுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டிருந்தால், அந்தப் பூங்காவுக்குள் துவக்கப்படும் தொழிற்சாலைகளுக்குத் தனியே சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்று O.M.No.J-  11013/36/2014-IA-1  dated 16th May 2014 தேதியிட்ட அந்த விளக்கத்தில் அது கூறியிருந்தது.  அதாவது, தொழிற் பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படாவிட்டால், அதற்குள் துவக்கப்படும் தொழிற்சாலைகள் அத்தகைய அனுமதி பெறாமல் ஆரம்பிக்கப்படக் கூடாது என்பதே அதன் பொருள். 

பாஜக அரசு பதவியேற்றதும் அந்த விளக்கத்தைத் திரித்து புதிய விளக்கமொன்றைக் கொடுத்தது. “14.09.2006க்கு முன்பு அறிவிக்கை செய்யப்பட்ட தொழிற்பேட்டை / தொழிற் பூங்கா ஆகியவற்றில் துவக்கப்படும் எந்தவொரு தொழிற்சாலைக்கும் புதிதாக சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என அந்த விளக்கத்தில் பாஜக அரசு கூறியது (O.M.No.J-11013/36/2014-IA-I dated 10th December 2014 ) இதன்மூலம் அந்தத் தொழிற்பேட்டை / தொழிற்பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி இருக்கிறதா என்பது முக்கியமில்லை என பாஜக அரசு ஆக்கியது. அந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் ஸ்டெர்லைட் நிறுவனம் தனது கட்டுமானப் பணிகள் சட்டத்துக்கு உட்பட்டவை என வாதிட்டு வந்தது.

பா.ஜ.க. அரசு அளித்த சட்டத்துக்கு முரணான விளக்கத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2016ஆம் ஆண்டு ரத்து செய்ததோடு மக்கள் கருத்தறியும் கூட்டம் கட்டாயம் என அறிவித்துவிட்டது. ஆனால் 2016 ஆம் ஆண்டைய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்ட தமது கட்டுமானப் பணியைக் கட்டுப்படுத்தாது என ஸ்டெர்லைட் நிறுவனம் வாதிட்டது. அந்த வழக்கில்தான் இப்போது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஸ்டெர்லைட்டுக்கும் பாஜகவுக்கும் இடையே உள்ள உறவு 

பா.ஜ.க. அரசு இந்த அளவுக்கு சட்டத்துக்குப் புறம்பாக விளக்கத்தை அளித்து ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு உதவ வேண்டியதன் தேவை என்ன? என்ற கேள்வி எழலாம். 2014 பாராளுமன்றத் தேர்தலின்போது பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயைத் தேர்தல் பிரசாரத்திற்கு பா.ஜ.க. பயன்படுத்தியது. அதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பின. கார்பரேட் நிறுவனங்களிடம் அதிக அளவில் அக்கட்சி நன்கொடை பெற்றது என்பது பின்னரே தெரியவந்தது. 

2013 -14ஆம் ஆண்டுகளில் கார்பரேட் நிறுவனங்களிடம் அதிக அளவு நன்கொடை பெற்றதில் முதலிடம் வகிக்கும் கட்சியாக பா.ஜ.க.வே இருக்கிறது. அக்கட்சி 1480 பேரிடம் 363 கோடி ரூபாய் நன்கொடை பெற்றதாகத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருந்தது. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கொடுத்த 34 கார்பரேட் நிறுவனங்களின் பட்டியலும் அதில் அடக்கம். அந்த கார்பரேட் நிறுவனங்கள் மொத்தமாக 120 கோடி ரூபாயை பா.ஜ.க.வுக்கு நன்கொடையாக அளித்திருந்தன. அப்படி மிக அதிகளவில் நன்கொடை அளித்த கார்பரேட் நிறுவனங்களின் வரிசையில் ஸ்டெர்லைட் நிறுவனமும் அதன் தாய் நிறுவனமான வேதாந்தா குழுமமும் இருக்கிறது. வேதாந்தா குழுமம்  22.5 கோடி ரூபாயை பா.ஜ.க.வுக்கு நன்கொடையாக அளித்துள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனம் 15 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. கணக்கில் சொல்லப்பட்ட தொகையே இவ்வளவு என்றால், இன்னும் வெளிப்படுத்தப்படாத தொகை எவ்வளவு என்பதை நாம் யூகித்துக் கொள்ளலாம். 

பிரதமரின் மௌனம்

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதனுடைய பொருளாதார கொள்கைகள் எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவே இருந்து வருகின்றன என்பதை எல்லோருமே அறிவர். அதற்கான காரணம் அவை அள்ளிக்கொடுக்கும் நன்கொடைதான். இப்போதும்கூட தூத்துக்குடியில் நடத்தப்பட்ட படுகொலைகளைக் கண்டிக்காத கட்சி பா.ஜ.க. மட்டும்தான். 

தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து இந்தியா முழுவதும் கண்டனக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் அதைக் கண்டித்திருக்கிறார்கள். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியோ கிரிக்கெட் வீரர் விராத் கோலியோடு  உடற்பயிற்சி செய்யும் சவாலில் ஈடுபட்டிருக்கிறார். துப்பாக்கி சூடு பற்றியோ ஸ்டெர்லைட் ஆலை பற்றியோ அவரோ அவரது அமைச்சர்களோ  ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவர்களது மௌனமே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக ஏவப்பட்டிருக்கும் வன்முறையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைப் புலப்படுத்துகின்றன. 

இப்போது போலீஸின் கையில் இருக்கும் ஆயுதத்தின் வலிமையை வைத்து மக்களை ஒடுக்கலாம். 2019ல் பொதுத் தேர்தல் வரும், மக்கள் தமது கையில் வாக்குரிமை என்னும் ஆயுதத்தை எடுப்பார்கள். அதன் வலிமை என்னவென்பது ஆட்சியாளர்களுக்கு அப்போது தெரியும்.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com