
தூத்துக்குடியில் போராட்டத்தின் போது நடந்த தாக்குதலில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்த அரசியல் தலைவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. இந்தப் போராட்டத்தில் கல்வீச்சு சம்பவங்கள், வாகனங்கள் எரிக்கப்பட்டதையடுத்து காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். துப்பாக்கிச் சூட்டில் 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த 70க்கும் அதிகமானோர் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். போராட்டத்தின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 23 - 25ஆம் தேதி வரை 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அரசியல் தலைவர்கள் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திருமாவளன், கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்தனர். தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் மருத்துவமனைக்கு சென்ற அரசியல் தலைவர்கள் மீது 143, 188, 153 (A), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.