
அரசு முறை பயணமாக இன்று பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா புறப்பட்டுச் சென்றார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்கவுள்ள பிரதமர், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து பேசுவார் எனத் தெரிகிறது. ஈரானுடனான அமெரிக்காவின் மோதல் போக்கால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஈரானில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சபார் துறைமுகம் அமைப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புடினும் மோடியும் நடத்தும் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது. சோச்சி நகரத்தில் நடைபெறும் இச்சந்திப்பில் ஆஃப்கானிஸ்தான், சிரியா நிலவரங்கள் குறித்தும் எதிர்வரும் முக்கியமான சர்வதேச கூட்டங்கள் குறித்தும் இரு தலைவர்களும் பேச உள்ளனர். 4 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை தனிப்பட்ட சந்திப்பு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.