Published : 04,May 2018 03:15 PM
தமிழக மாணவர்களுக்கு உதவத் தயார் - கேரள முதல்வர்

நீட் தேர்வு எழுத கேரளாவுக்கு வரும் தமிழக மாணவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
நீட் தேர்வு எழுத போதிய மையங்கள் அமைக்காததால், கணிசமான தமிழக மாணவ, மாணவிகள் ராஜஸ்தான், கேரளா மாநிலங்களில் தேர்வு எழுதவுள்ளனர். இதில் கேரளாவில் அதிக அளவிலான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர். மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பலரும் உதவி செய்ய முன் வந்துள்ளனர். தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர், உடன் செல்லும் ஒருவருக்கு இலவச ரயில், பேருந்து டிக்கெட் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரயிலில் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநிலங்களுக்கு தேர்வெழுத செல்லும் தமிழக மாணவர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளவுக்கு தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்க மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுக்கு பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், தமிழக மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளை அமைத்து தர அவர் ஆணை பிறப்பித்துள்ளார்.