Published : 04,May 2018 10:51 AM
வெளிமாநிலங்களுக்கு நீட் எழுத செல்லும் மாணவர்களுக்கு இலவச ரயில், பேருந்து டிக்கெட் ! தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர், உடன் செல்லும் ஒருவருக்கு இலவச ரயில், பேருந்து டிக்கெட் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ரயிலில் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநிலங்களுக்கு தேர்வெழுத செல்லும் தமிழக மாணவர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 6ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள நீட் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு எழுதும் தமிழக கிராமப்புற மாணவர்களுக்கும் பிற மாநிலங்களில் மையங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடி உள்ளனர். நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் பலருக்கும் கேரளாவில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடைசிவரை தங்கள் மாநிலங்களில் மையங்கள் கிடைத்துவிடும் என காத்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதனையடுத்து வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ பல்வேறு தன்னார்வலர்கள் முன் வந்தனர். அரசும் மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து தற்போது தமிழக அரசு சார்பில் இலவச பயண டிக்கெட்டும், ரூ1000 உதவித் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நுழைவுச்சீட்டு நகல், பள்ளி அடையாள அட்டை நகலை அடிப்படையாக கொண்டு இந்த உதவித்தொகை வழங்கப்படும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து முன்பணத்தை பெற்றுக் கொள்ளலாம். நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்கள் 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ஆலோசனை பெறலாம்.