Published : 01,May 2018 06:03 AM
நான்கு ஆண்டுகளில் 4749 பாலியல் வன்கொடுமை வழக்குகள்: நவீன் பட்நாயக்

ஒடிசாவில் கடந்த 2014 முதல் 2017 வரை மட்டும் சுமார் 4749 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் 385 கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓடிசா காங்கிரஸ் மாநில தலைவர் தாராபிரசாத் பாஹினிபதி (Taraprasad Bahinipati) கடந்த 4 வருடங்களாக மாநிலத்தில் பதிவான பாலியல் வழக்கு குறித்து எழுத்துப்பூர்வமாக கேள்வி கேட்டிருந்தார். இதுதொடர்பாக பேரவையில், கடந்த 2017ஆம் ஆண்டு சிறுமிகளுக்கு எதிராக 1,283 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 2016-ல் (1,204), 2015-ல் (1,212), 2014-ல் (1,050) வழக்குகளும் பதியப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஓடிசாவில் கடந்த 2014 - 2017 ஆம் ஆண்டுகளில் சுமார் 4749 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் 4,462 பேரை கைது செய்துள்ளதாகவும் சிறுமிகளுக்கு எதிராக நடைப்பெற்ற 4,749 பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஒடிசா மாநில காவல்துறையில் 2014 முதல் 2017 வரையான காலகட்டத்தில் 385 கூட்டுபாலியல் வன்கொடுமை வழக்குகள் பதியப்பட்டுள்ளது.இதில் 2017-ல் (92), 2016-ல் (93), 2015-ல் (109), 2014-ல் (91) வழக்குகளும் பதியப்பட்டுள்ளதாக பேரவையில் நவீன் பட்நாயக் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் கைதுசெய்யப்பட்டுள்ள 752 நபர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.12 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பட்நாயக் தெரிவித்தார்.