Published : 29,Apr 2018 02:32 AM
வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்: பசியால் வழிப்பறியில் ஈடுபட முயற்சி

புதுச்சேரியில் பெண்ணின் கைப்பையை வழிபறி செய்த சிறுவனை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்தனர்.
புதுச்சேரியில் இயங்கும் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இரு பெண்கள், வேலை முடிந்து நேற்றிரவு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரது கைப்பையை சிறுவன் ஒருவன் வழிபறி செய்துகொண்டு ஓடினான். அங்கிருந்த பொதுமக்கள், அவனை பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் சிறுவன் வேலூரைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நிலையில், தந்தையிடம் சண்டையிட்டு புதுச்சேரிக்கு வந்திருப்பது தெரியவந்தது. உணவிற்கு வழியில்லாததால் திருடியதாக கூறினான். இச்சம்பவம் குறித்து சிறுவனின் தந்தைக்கு தகவல் அளிக்கப்பட்டது மேலும் இது தொடர்பாக இரு பெண்களும் புகார் அளிக்காததால் சிறுவனை எச்சரித்து காவல்துறையினர் அவனது தந்தையுடன் அனுப்பி வைத்தனர்.