வெளிநாட்டு நிதியை பெற்று போராட்டங்களை தூண்டுகிறார்கள்: ஸ்டெர்லைட் நிர்வாகம்

வெளிநாட்டு நிதியை பெற்று போராட்டங்களை தூண்டுகிறார்கள்: ஸ்டெர்லைட் நிர்வாகம்
வெளிநாட்டு நிதியை பெற்று போராட்டங்களை தூண்டுகிறார்கள்: ஸ்டெர்லைட் நிர்வாகம்

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு வெளிநாட்டு நிதி அளிக்கப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், ஆலை விரிவாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 52வது நாளாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு சமூக செயல்பாட்டாளர்களும், அரசியல் கட்சிகளும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. மாணவர்களும் மக்களுக்கு ஆதரவாக போராடி வருகிறார்கள். பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை ஒரு புறம் நடத்தி வர ஸ்டெர்லைட் நிர்வாகமோ தங்களிடம் எவ்வித பிரச்னையும் இல்லை என்றும் தங்களுக்கு எதிராக பொய் பிரச்சாரம் என்று கூறிவருகிறார்கள். 

இதுதொடர்பாக ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சிஇஓ ராம்நாத் டைம் ஆப் இந்தியா பத்திரிகைக்கு விரிவான பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அவரது பேட்டியின் சில அம்சங்கள்:-

இந்தப் போராட்டங்கள் ஏன் நடைபெறுகின்றன?

விரிவாக்க திட்டங்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் தவறான பிரச்சாரங்களை தூத்துக்குடியில் உள்ள மக்களிடையே மேற்கொள்வதன் மூலம் தமிழகத்தின் மற்றும் நாட்டின் வளர்ச்சியை நடுக்க முயற்சிக்கிறார்கள். 

போராட்டங்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?

வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று செயல்படும் சில சமூக செயல்பாட்டாளர்களால் தான் இந்தப் போராட்டங்களும், தவறான கருத்துக்களும் வேகமாக பரப்பப்படுகிறது.

நிர்வாகத்தால் பிரச்னையை கையால முடியவில்லையா?

நாங்கள் உள்ளூர் மக்களுடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்கிறோம். பெரும்பாலான மக்கள் இந்தத் திட்டத்தை வரவேற்கிறார்கள். வளர்ச்சி திட்டங்களுக்கு எதிரான சில சமூக செயல்பாட்டாளர், தங்களது சொந்த கருத்துகளுக்காக எங்களது நடவடிக்கைகளை தடுக்க முயற்சிக்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் 22,500 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும்.

காற்றில், நீரில், மண்ணில் காப்பர் மாசு கலப்பதாக போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள்?

ஆதாரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுவதில்லை. அனைத்து புகார்களுக்கும் உச்சநீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம் 2013ம் ஆண்டிலே பதில் அளித்துவிட்டது.
 
உச்சநீதிமன்றம் அளித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றவா?

சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த எந்த விதிமுறையையும் நாங்கள் மீறவில்லை. உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள 30 வழிமுறைகளை நாங்கள் பின் பற்றுகிறோம். நாங்கள் உச்சநீதிமன்ற வழிமுறைகளை பின்பற்றுவதை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது.

****

முன்னதாக ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு அளிக்குமாறு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் இதுபோன்ற வாதங்களே முன் வைக்கப்பட்டன. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஸ்டெர்லைட் ஆலையின் சட்டப்பிரிவு பொதுமேலாளர் சத்யபிரியா தாக்கல் செய்த மனுவில், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தவறான தகவல்களை பரப்பி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆலைக்கு வாகனங்கள் சென்று வர முடியவில்லை. மேலும் தொழிற்சாலை பணியாளர்களுக்கும், தொழிற்சாலை சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கபோவதாகவும் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் வருகின்றன. சிலர் தற்கொலைப்படையாக மாறி ஆலைக்கு சேதம் விளைப்பதாக கூட்டங்களில் பேசுகின்றனர். ஆலை ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.” என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.  ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு அளிப்பது பற்றி நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி எஸ்.பிக்கு உயர்நீதிமன்ற கிளையும் நேற்று உத்தரவிட்டது.

ஆனால், ஸ்டெர்லைட் விவகாரத்தில் உண்மை என்பது ஏதேனும் ஒன்றாகத்தான் இருக்க முடியும். ஒன்று ஸ்டெர்லைட் ஆலையின் மாசினால் பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்படியில்லை என்றால் தற்போது மாசுபாடு இருப்பதாக மக்கள் கூறுவதற்கு வேறு காரணம் இருக்க வேண்டும். ஏதுவாக இருந்த போதும் மக்களின் அச்சத்தை போக்க உண்மையை வெளிக் கொணர்வது மத்திய, மாநில அரசுகளின் கடமை. காலம் தாழ்த்தாமல் அதனை செய்ய வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com