Published : 05,Mar 2018 04:51 PM

தமிழை பேசினால் மட்டும் தமிழ் வளராது - ரஜினிகாந்த் பேச்சு

Politician-Rajinikanth-To-Deliver-Debut-Speech--Talk-To-Students-In-Chennai

தமிழை பேசினால் மட்டும் தமிழ் வளராது,  தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னையில் எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் பேசிய ரஜினிகாந்த், தன் மீதான பல்வேறு விமர்சனங்களுக்கு நேரடியாக பதில் அளித்தார். பல்வேறு விஷயங்கள் குறித்து குழப்பம் இல்லாமல் தெளிவான விளக்கத்தை கொடுத்தார். 

இதில், மொழி குறித்து ரஜினி பேசுகையில், “மாணவர் பருவம் தான் வாழ்க்கையில் வசந்த காலம். அதேபோல் அதுதான் சோதனையான நாட்களும்.  அரசியலை பற்றி தெரிந்துகொள்ளுங்கள், புரிந்து கொள்ளுங்கள். ஆனால் படிக்கும் காலத்தில் முழுவதுமாக அரசியலில் ஈடுபட வேண்டாம். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். நானே கட்சி ஆரம்பித்தாலும், அதில் ஈடுபடக் கூடாது. ஓட்டு மட்டும் போட்டுவிட்டு படிப்பை பாருங்கள். 

நானும் தொடக்க கல்வியை கன்னட மொழியில்தான் பயின்றேன். பின்னர், ஒருகட்டத்தில் என்னை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தார்கள். அங்கு எல்லாமே ஆங்கிலம் தான். ஆங்கிலம் தெரியாமல் நான் பின் தங்கிவிட்டேன். ஆங்கில மொழி கற்பது மிகவும் முக்கியம். தமிழகத்தில் பெரும்பாலான மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருப்பார்கள். ஆனால், மேல்படிப்பில் ஆங்கில வழிக் கல்விதான். 

எந்த மொழியில் தவறாக பேசினாலும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், ஆங்கிலத்தில் தட்டுதடுமாறி பேசினால் கிண்டல் செய்வார்கள் கலாட்டா செய்வார்கள். மற்றவர்கள் ஏதாவது சொல்வார்கள் என்றே ஆங்கிலத்தில் பேச நாம் தயங்குகிறோம். ஆங்கில மொழி பேச பேசத்தான் வரும். மாணவர்கள் நண்பர்களுக்குள் ஆங்கிலம் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். ஆங்கிலம் தான் உங்களுக்கு எதிர்காலம். உங்களது தொழிலுக்கு முக்கியமானது. இணையதள உலகில், சர்வதேச அளவில் ஆங்கில மொழி முக்கியமானது. மாணவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள், அதுதான் முக்கியம்.

தமிழன் தமிழை பேசினால் மட்டும் தமிழ் வளராது,  தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும். இன்றைய காலத்தில் மாணவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டு வேறு மாநிலங்களுக்கு, வேறு நாடுகளுக்கு சென்று தொழில் செய்தால்தான் அது தமிழுக்கு பெருமை, தமிழனுக்கு பெருமை. அப்துல் கலாம், சுந்தர் பிச்சையால் தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை. அவர்களது ஆங்கில புலமைதான் அதற்கு முக்கிய காரணம்.

துணைவியை சரியாக தேர்ந்தெடுக்காவிட்டாலும் நண்பனை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல நண்பன் தான் வாழ்க்கைய சரியான பாதையில் கொண்டு செல்வார்கள்” என்று பேசினார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்