Published : 26,Feb 2018 11:11 AM
கேப்டன் அவதாரம் எடுக்கிறார் அஸ்வின்: பஞ்சாப் அணி அறிவிப்பு

பஞ்சாப் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ள அஸ்வின், அந்த அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. இதனையடுத்து, 11வது ஐபிஎல் திருவிழா, ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்குகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் தொடருக்கு ஏலத்தின் மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பதினோறாவது ஐபிஎல் போட்டிக்கான ஏலம் ஜனவரி மாத இறுதியில் நடைபெற்றது.
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 8 வருடங்களாக ஆடி வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின். அவரை ஏலத்தில் எடுப்போம் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியிருந்தார். ஆனால், எடுக்கவில்லை. அவரை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அஸ்வினை 7.6 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது.
இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அஸ்வினை கேப்டனாக அறிவித்துள்ளது. லைவ் சாட்டின்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று அந்த அணியின் ஆலோசகர் சேவாக் அறிவித்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில், அஸ்வின், ஆரோன் பிஞ்ச், டேவிட் மில்லர், லோகேஷ் ராகுல், கருண் நாயர், மோகித் சர்மா, மனோஜ் திவாரி, யுவராஜ் சிங் போன்ற முக்கிய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.