ஐபிஎல் தந்த அனுபவம்: புவனேஷ்வர்குமார் பேட்டி

ஐபிஎல் தந்த அனுபவம்: புவனேஷ்வர்குமார் பேட்டி
ஐபிஎல் தந்த அனுபவம்: புவனேஷ்வர்குமார் பேட்டி

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் போட்டித் தொடரை அடுத்து டி20 தொடரையும் கைப்பற்றியது. 

நேற்று நடந்த கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் விராத் கோலி விளையாடவில்லை. அணியில் தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் படேல் சேர்க்கப்பட்டிருந்தனர். தவான் 40 பந்துகளில் 47 ரன்களும் சுரேஷ் ரெய்னா, 27 பந்துகளில் 43 ரன்களும் விளாசினர். தென்னாப்பிரிக்க தரப்பில் ஜூனியர் டாலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணியால் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கேப்டன் டூமினி 41 பந்துகளில் 55 ரன்கள் விளாசினார். ஜோங்கர் 24 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். ஆட்டநாயகனாக சுரேஷ் ரெய்னாவும், தொடர் நாயனாக புவனேஷ்வர் குமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் புவனேஷ்வர்குமார் கூறும்போது, ‘இப்படியொரு ஆடுகளம் இந்தியாவில் கிடைப்பது எனக்கு கஷ்டம். அதனால் இங்குள்ள ஆடுகளத்தில் ரசித்து பந்துவீசினேன். இதற்கு ஐபிஎல் போட்டியும் ஒரு காரணம். அந்தப் போட்டி தந்த அனுபவத்தால்தான் முதல் மற்றும் கடைசி ஓவர்களில் யோசித்து பந்துகளை வீச முடிகிறது. டி20 போட்டியை பொறுத்தவரை முதல் ஆறு ஓவர்களில் அதிக ரன்கள் விட்டுக்கொடுக்காமல் இருப்பது முக்கியம். அதை ஒவ்வொரு போட்டியிலும் கடை பிடித்தேன்’ என்றார்.

ரோகித் சர்மா கூறும்போது, ‘உண்மையை சொல்ல வேண்டும் என்றால் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். இந்தப் போட்டியை இழந்துவிடுவோம் என்றுதான் நினைத்தேன். ஆனால், பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பறித்துவிட்டார்கள். இதுபோன்ற போட்டிகள் பல அனுபவங்களைக் கொடுக்கும். அதில் இருந்து பாடங்கள் கற்றுக்கொள்ள முடியும். இந்த வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள்தான் காரணம்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com