
பிரதமர் மோடி பங்கேற்ற விழாவிற்கு தாமதமாக சென்ற தமிழிசைக்கு, அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி, நிகழ்ச்சி நடைபெறும் 5.30 மணியளவில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார்.
பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வந்தபின்பு தமிழிசை தாமதமாக வந்துள்ளார். தாமதமாக வந்ததால் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் போலீசாரிடம் தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சில நிமிடங்கள் வரை இது நீடித்தது. பின்னர் ஒருவழியாக அவருக்கு போலீசார் அனுமதி அளித்தனர். தமிழிசைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வாயில் பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
பாதுகாப்பு காரணங்களைக் கருதி அனுமதியளிக்கவில்லையென்று போலீஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அனுமதி மறுப்பட்ட சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, வரும் வழியில் தொண்டர்கள் பலர் குவிந்திருந்ததால், அவர்களை சந்தித்துவிட்டு வந்ததாக தெரிவித்தார்.