
தமிழ்மொழி சமஸ்கிருதத்தைவிடத் தொன்மையானது என்று குறிப்பிட்டிருக்கும் பிரதமர் மோடியின் கூற்று பெருமிதம் தருகிறது என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விடவும் பழமையானது என புகழாரம் சூட்டினார். மேலும் பேசிய அவர், “பழமையான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விடவும் பழமையானது என்பது நிறைய பேருக்குத் தெரியாது. நிறைய அழகுகளை தன்னுள் கொண்டது தமிழ்மொழி. வணக்கம் என்பதை மட்டும்தான் தமிழில் எனக்கு சொல்லத் தெரியும். அதைத் தவிர தமிழில் வேறு எதுவும் தெரியாதது குறித்து வருந்துகிறேன்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்மொழி சமஸ்கிருதத்தைவிடத் தொன்மையானது என்று குறிப்பிட்டிருக்கும் பிரதமர் மோடியின் கூற்று பெருமிதம் தருகிறது என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் வைரமுத்து, “ தமிழ்மொழி சமஸ்கிருதத்தைவிடத் தொன்மையானது என்று குறிப்பிட்டிருக்கும் பிரதமர் மோடி அவர்களின் கூற்று பெருமிதம் தருகிறது; மகிழ்ச்சி.
மூத்த மொழிக்கான முன்னுரிமையும் பெருமையும் தமிழுக்கு வழங்கப்படும் என்று நம்புகிறேன். அதற்கான அறிகுறியென்றே இதை அறிகின்றேன்.” என தெரிவித்துள்ளார்.