பேருந்து கட்டண உயர்வு: வலுக்கும் மாணவர்கள் போராட்டம்

பேருந்து கட்டண உயர்வு: வலுக்கும் மாணவர்கள் போராட்டம்
பேருந்து கட்டண உயர்வு: வலுக்கும் மாணவர்கள் போராட்டம்

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் வலுவடைந்து வருகிறது.

தமிழக அரசு கடந்த 19ஆம் தேதி பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண உயர்வு 20ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அரசின் இந்த திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பேருந்து கட்டணம்  50 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 7ஆண்டுகளாக பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. டீசல், உதிரி பாகங்கள் விலை ஏற்றத்தால் தான் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கட்டண உயர்வால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று 3வது நாளாக பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராடி வருகின்றனர். 

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து இரண்டாவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மாணவர்கள் கல்லூரி  முன்பாக தரையில் அமர்ந்து போராட்டி வருகின்றனர்.பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கல்லூரி மாணவர்கள் கூறுகின்றனர். உடனடியாக கட்டண உயர்வைத்திரும்ப பெற வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்துகின்றனர். 

கும்பகோணம் அரசு தன்னாட்சி கல்லூரி மாணவ, மாணவிகள் 2000 பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். பெரம்பலூர் செட்டுக்குளம் பகுதியில் கட்டண உயர்வை கண்டித்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் போரட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com