
ஆன்மிக அரசியல் என்பது தர்மமான, நியாயமான அரசியல் என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். அரசியலில் ஈடுபட இருப்பதாக அறிவித்தபின் வீடு திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
பலத்த எதிர்பார்ப்புக்கிடையே அரசியலில் ஈடுபடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் முன்னிலையில் இதனை அவர் அறிவித்தார். மேலும், தனிக்கட்சி தொடங்கி, வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இப்போது அரசியல் கெட்டுப் போயிருப்பதாகவும், ஜனநாயகம் சீர்கெட்டுக் கிடப்பதாகவும் கூறிய அவர், ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட ஆன்மிக அரசியலை கடைபிடிக்கப் போவதாகவும் தெரிவித்தார். ஆன்மிக அரசியல் என்று ரஜினி கூறியதற்கு சில தரப்பில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்புக்கு பின் போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய ரஜினியிடம், ஆன்மிக அரசியல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி, ஆன்மிக அரசியல் என்பது தர்மமான, நியாயமான அரசியல் என தெரிவித்தார். மேலும் தனது அரசியல் வருகைக்கு வரவேற்பு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.