
கன்னியாகுமரி மாவட்ட மீனவ, விவசாய பிரதிநிதிகளை பிரதமர் மோடி சந்தித்து ஒகி புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
ஒகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி இன்று மதியம் கன்னியாகுமரிக்கு வந்தார். ஒகி புயல் பாதிப்பு குறித்து கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஒகி புயல் பாதிப்பு குறித்து பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி விளக்கினார்.
பின்னர் விருந்தினர் மாளிகையில், மீனவ, விவசாய பிரதிநிதிகளை சந்தித்த பிரதமர் மோடி அவர்களது குறைகளை கேட்டறிந்தார். ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் மீனவ பிரதிநிதிகள் வலியுறுத்தினர். புயலால் சேதமடைந்த பயிர்கள், படகுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.