
திருவாரூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான முட்டை கையிருப்பு இல்லை என புகார் எழுந்துள்ளது.
மாவட்டம் முழுவதும் 1,072 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. அவற்றில் சத்துணவு திட்டம் மூலம் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் முட்டைகள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நிலையில், இந்த வாரத்திற்கான முட்டை பெரும்பாலான பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.
முட்டை கொள்முதல் விலை உயர்வு காரணமாக பள்ளிகளுக்கு சத்துணவுத்திட்டத்தில் முட்டை வழங்கப்படவில்லை என கருதப்படுகிறது. சில பள்ளிகளில் வரும் புதன்கிழமை வரை மட்டுமே முட்டை கையிருப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, சமூகநலத்துறை உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றது புதிய தலைமுறை. பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு முட்டை கையிருப்பில் தற்போது எந்த பிரச்னையும் இல்லை என்றும் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் முட்டை அனுப்பப்பட்டு வருவதாகவும் சமூகநலத்துறை உயரதிகாரிகள் விளக்கமளித்தனர்.