
தேயிலை தொடர்ந்து விலை வீழ்ச்சியடைந்து வருவதால் மலைத் தோட்ட காய்கறி விவசாயத்திற்கு நீலகிரி விவசாயிகள் மாறிவருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பணப்பயிரான தேயிலை விவசாயத்தை நம்பி 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. கடந்த காலங்களில் ரஷ்யா, எகிப்து, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு நீலகிரி தேயிலை பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது அது வெகுவாகக் குறைந்து விட்டது. இதன் காரணமாக உள்நாட்டுத் தேவை போக அதிகளவு தேயிலைகள் தேக்கமடைந்து வருவதால் கடுமையான விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இந்த விலை வீழ்ச்சியில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும், தங்களது வாழ்வாதாரத்தை காக்கவும் தேயிலை செடிகளை அழித்து அதற்குப் பதிலாக மலைத் தோட்ட காய்கறிகளை பயிரிடவேண்டிய கட்டாய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக குன்னூர் கோத்தகிரி பகுதியில் உள்ள பெரும்பாலான தேயிலை விவசாயிகள் தற்போது குறுகிய கால பயிர்களான முட்டைகோஸ், கேரட், உருளைக் கிழங்கு உள்ளிட்ட மலைத் தோட்ட காய்கறிகளை மாற்றுப்பயிராக பயிரிட்டத் துவங்கியுள்ளனர். ஆனால் இந்த விவசாயத்தில் காட்டுப்பன்றி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் தொல்லை அதிகம் இருப்பதால் இதிலும் பெருமளவு நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.