
சசிகலா உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.
சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்களின் வீடுகளில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ், ஜாஸ் சினிமாஸ், ஜெயா டிவி சிஇஓ விவேக் வீடு மற்றும் அலுவகங்கள், தினகரன் வீடுகள், திவாகரன் வீடுகள் உள்ளிட்ட 187 இடங்களில் ஒரே சமயத்தில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 6 வருமான வரித்துறை அதிகாரிகளின் தலைமையில் 1,800 அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டனர். இந்நிலையில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை தமிழகத்தில் இன்று முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடைபெறுவதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் குறுக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் உண்மைத்தன்மை பற்றி சம்பந்தபட்டவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் வருமான வரித்துறையினர் கூறியுள்ளனர். இதில் மன்னார்குடியில் நடைபெற்ற சோதனை தொடர்பாக சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது.