
மகேந்திர சிங் தோனி, டி20 போட்டிகளுக்கு தகுந்தபடி விளையாட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அறிவுரை கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி தோற்றதற்கு தோனியின் மந்தமான விளையாட்டே காரணம் என்று விமர்சனம் எழுந்தது. முன்னாள் வீரர்கள் லஷ்மண், அகர்கர் உள்ளிட்டோர் தோனிக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். அதேபோல், தோனிக்கு ஆதரவாக கேப்டன் விராட் கோலி, கவாஸ்கர் உள்ளிட்டோர் குரல் கொடுத்தனர்.
துபாயில் கிரிக்கெட் அகாடமி திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய தோனி, வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும், அது மதிக்கப்பட வேண்டும் என்று கூறி தன் மீதான விமர்சனங்களுக்கு அனுபவபூர்வமாக பதில் அளித்தார். இருப்பினும், தோனி தொடர்பான சர்ச்சை ஓய்வதாக இல்லை. தற்போது, தோனிக்கு எதிராக முன்னாள் கேப்டன் கங்குலி களத்தில் இறங்கியுள்ளார்.
டி20 போட்டிகளில் அதன் தன்மைக்கேற்ப விளையாடுமாறு தோனியிடம், கேப்டன் விராட் கோலிதான் அறிவுறுத்த வேண்டும் என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
இது குறித்து கங்குலி கூறுகையில், “தோனியின் டி20 ரெக்கார்டு ஒருநாள் போட்டிகளில் இருப்பது போன்று சிறந்ததாக இல்லை. கோலியும், அணி நிர்வாகமும் தோனியிடம் தனிப்பட்ட முறையில் பேசுவார்கள் என்று நம்புகிறேன். தோனியிடம் மகத்தான திறமை உள்ளது. ஒருநாள் போட்டிகளில் நிச்சயம் விளையாட வேண்டும். அவர் டி20 போட்டிகளை வேறு விதமாக அணுகினால் நிச்சயம் வெற்றி பெற்றுவார்” என்று கூறினார்.