
17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாடிய இந்திய அணி வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்தனர்.
உலகக்கோப்பை தொடரை முடித்தவுடன் இந்திய அணியின் இளம் வீரர்கள் ஆசிய சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றில் விளையாட சவுதி அரேபியா சென்றுவிட்டனர். இந்த நிலையில் தாயகம் திரும்பிய இளையோர் கால்பந்து அணியினர், பிரதமரின் அழைப்பை ஏற்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். கர்நாடகாவை சார்ந்த ஹென்றி ஆண்டனி, மஹாராஷ்ட்ராவை சார்ந்த அனிகெட் அனில் ஜாதவ், ராகுல் கன்னோலி ப்ரவீன் என பலரும் தனித்தனியே மோடியை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதற்கான புகைப்படங்களை மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது வாழ்த்தை கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரும் உடனிருந்தார்.