
கடலூரில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் மூதாட்டி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் கருமாச்சிபாளையத்தை சேர்ந்த மூதாட்டி மீனாட்சி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி என்பவருக்கு ரூ.1 லட்சம் பணம் கொடுத்துள்ளார். இந்த பணத்தை மீனாட்சி கேட்டபோது, பணம் கொடுத்ததற்கான ரசீதை கொண்டுவருமாறு பாப்பாத்தி கூறியுள்ளார். அதன்படி பணம் கொடுத்த ரசீதை எடுத்துக்கொண்டு பாப்பாத்தியின் வீட்டிற்கு மீனாட்சி சென்றுள்ளார்.
அப்போது கடனை திருப்பிக்கொடுக்க முடியாது எனக்கூறி ஆத்திரமடைந்த பாப்பாத்தி மற்றும் அவரது மகள் வளர்மதி ஆகியோர், மீனாட்சியை சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளனர். அத்துடன் திருடர்கள் கொலை செய்தது போல் சம்பவத்தை திசை திருப்ப, மூதாட்டி மீனாட்சி அணிந்திருந்த நகைகளை திருடிவிட்டு சாலையோரத்தில் அவரது சடலத்தை போட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து சடலமாக மீனாட்சி கிடப்பது தொடர்பாக குள்ளஞ்சாவடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் விரைந்து விசாரணை நடத்திய காவல்துறையினர், உண்மையை கண்டறிந்து பாப்பாத்தி மற்றும் அவரது மகள் வளர்மதியை கைது செய்தனர்.