Published : 28,Oct 2017 07:55 AM
வணிக வரித்துறைக்கு உதவி ஆணையர்கள்: பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெற இத்துறைக்காக, 21 வணிகவரி துறை உதவி ஆணையர்கள் மற்றும் 8 மாவட்ட பதிவாளர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.