
இலங்கை சிறையிலிருக்கும் 54 மீனவர்களையும், 140 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையால் கடந்த இரு மாதங்களில் மட்டும் 46 மீனவர்களும், 9 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். 2017-ம் ஆண்டில் மட்டும் 317 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இந்திய அரசு மற்றும் தமிழக அரசின் தொடர் முயற்சியால் 263 பேர் விடுவிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
2015-ல் பிடித்துச்சென்ற 61 படகுகளில் 36 படகுகளை மட்டுமே விடுவிக்க இலங்கை அரசு ஒப்புக்கொண்டதாகவும், அதில் 26 படகுகள் மட்டுமே மீட்கும் நிலையில் இருந்ததாகவும், மற்றவை பழுதடைந்திருந்ததாகவும் முதலமைச்சர் பழனிசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, கடலில் மீனவர்கள் படும் துயரங்களுக்கு முடிவு கட்ட வேண்டுமெனக் கோரியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, இலங்கை சிறையிலிருக்கும் மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.