Published : 10,Mar 2023 07:10 AM

யோகிபாபுவின் ‘இரும்பன்’ பட இயக்குனர் வ. கீரா சம்பள விவகாரம்: நீதிமன்றம் புதிய உத்தரவு

Yogibabu-starrer-Irumban-director-s-salary-issue-court-orders-new

நடிகர் யோகிபாபு நடித்துள்ள இரும்பன் திரைப்பட இயக்குனரின் சம்பள நிலுவை தொகையை மூன்று நாட்களில் நீதிமன்றத்தில் செலுத்தாவிட்டால், படத்திற்கு தடை விதிக்கப்படும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கே.கே. நகரில் உள்ள லெமுரியா மூவீஸ் தயாரிப்பில் ஜூனியர் எம்.ஜி.ஆர், யோகிபாபு, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிப்பில், இரும்பன் என்ற படத்தை கீரா என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், இயக்குனர் கீரா, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

image

அதில் "கதை, திரைக்கதை, வசனம் போன்ற பணிகளுக்காக 20 லட்சம் ரூபாய் வழங்குவதாகக் கூறி கடந்த 2020 ஆம் ஆண்டு என்னை ஒப்பந்தமிட்டனர். தற்போது வரை எனக்கு 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும், ஆரம்ப தயாரிப்பு பணிகளுக்காக 10 லட்சம் ரூபாயும் மட்டுமே வழங்கப்பட்டது. எனக்கு வழங்க வேண்டிய மீதத்தொகை 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை வழங்காமல் திரையரங்கு, டிஜிட்டல், ஓடிடி போன்ற எந்த தளத்திலும் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

image

இந்த வழக்கு சென்னை 17வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜி.புவனேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குனருக்கு செலுத்த வேண்டிய 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை மூன்று நாட்களுக்குள் வழக்கின் கணக்கில் செலுத்த வேண்டுமென்றும், தவறினால் படத்திற்கு இடைக்கால தடைவிதிக்கப்படும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்