Published : 09,Mar 2023 07:52 AM

'நான் தலைவராக இருக்கும் வரை இந்த கட்சி இப்படித்தான் இருக்கும்' - அண்ணாமலை பேச்சு

Annamalai-speech-about-online-rummy

"பாஜக ஆன்லைன் ரம்மியை எதிர்க்கிறது, ஆன்லைன் ரம்மி மசோதாவை சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானமாக்கி கொடுத்தால் அதற்கு தமிழக ஆளுநர் கண்டிப்பாக கையெழுத்து போட்டுதான் ஆக வேண்டும். அப்படி இந்த சட்டம் அமலுக்கு வந்தாலும் அதற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு வர வாய்ப்பு இருக்கின்றது” என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்

கோவை சிட்ரா கலையரங்கில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “என் பெயருக்கு பின்னால் எம்.பி, எம்.எல்.ஏ. என போடுவதற்காக கட்சிக்கு வரவில்லை. பாஜக வளர வேண்டும் என்பதற்காகதான் முயற்சிக்கிறேன். இன்னொரு கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி பாஜக வளர கூடாது. அப்படி வளர்ந்தாலும் கூட அது தொடர்ச்சியானதாக இருக்காது. பாஜக, தமிழக மக்களின் அன்பை பெற்று வளர வேண்டும். 

image

நேற்று மதுரையில் பேசியது தான் என்னுடைய கருத்து, அதிலிருந்து எந்த மாற்றமும் கிடையாது. மற்றவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள் இருப்பதென்பது அவரவருடைய கருத்துகள். வேறு கட்சியில் இருக்கும் தலைவர்கள், வளர்ந்த கட்சியில் இணைந்து தலைவர்களாக வாழ்கின்றனர். பாஜக தொண்டர்கள் யாரும் செல்லாத பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். என்னுடைய பாதை தனியாகத்தான் இருக்கிறது. பாஜகவை அதிமுகவுடன் இணைத்து பேசாதீர்கள். ஆளும் கட்சியுடன் கம்பேர் பண்ணாதீர்கள். மற்ற கட்சியில் இருக்கும் எல்லா தலைவர்களும் ஆட்சிக்கு வந்த பிறகு தான் இணைந்திருப்பார்கள். பாஜக தொண்டர்கள் எப்பொழுது ஆட்சிக்கு வருவோம் என தெரியாமல் காத்திருக்கின்றனர். அதில் நானும் ஒருவனாக இருக்கின்றேன். 

அதிமுகவை பாஜகவுடன் கம்பேர் பண்ணினால் அது சரியான கம்பரிசன் கிடையாது. எங்களுடைய பாதை தனித்தன்மையான பாதை. அது எப்படி இருக்கும் என்று சொல்லிவிட்டேன், நான் எப்படி இருப்பேன் என்று சொல்லிவிட்டேன், நான் எதற்கும் மாற மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். நான் தலைவராக இருக்கும் வரை இந்த கட்சி இப்படித்தான் இருக்கும். இந்த கட்சியில் இன்டர்னலாக சில விஷயங்கள் மாறித்தான் ஆக வேண்டும். சில இடங்களுக்கு செல்ல வலியை சந்திக்க வேண்டும், ரத்தம் வரவேண்டும், அவமானங்களை சந்திக்க வேண்டும். அனைத்து மோசமானவற்றையும் கடந்துதான் செல்ல வேண்டும். ஒவ்வொரு விமர்சனங்களுக்கும் அண்ணாமலை பதில் சொல்ல தேவையில்லை.

எல்லா கட்சியும் வளர்ந்து வந்த பாதை வேறு, பாஜக வளரும் பாதை வேறு. யார் கருத்து சொன்னாலும் அது அவர்களுடைய கருத்துக்கள், அது அவர்களுடைய அரசியல் அனுபவத்தை வைத்து சொல்கின்றனர். நான் நேற்று சொன்ன கருத்தில் உறுதியாக இருக்கின்றேன், அதில் எந்த மாற்றமும் இல்லை. 

ஜெயலலிதாவுடன் யாரையும் ஒப்பிடவில்லை, யாரும் யாரையும் கம்பேர் பண்ணவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தன்மையும் இருக்கிறது. சில அரசியல் கட்சிகளில் மேனேஜர் இருக்கின்றனர், சில கட்சிகளில் தலைவர்கள் இருக்கின்றனர், ஜெயலலிதாவிற்கு டெபாசிட் போனாலும் துணிந்து நின்று தேர்தலில் ஜெயித்தார்கள். தலைவர் என்பவர் எப்படி இருப்பார் என்பதற்கான உவமை தான் அவரை சொன்னது. இந்த அரசியலில் காம்ப்ரமைஸ் பாலிடிக்ஸ் எனக்கு தேவையில்லை. என்னுடைய முடிவில் தெளிவாக இருக்கின்றேன். பாஜகவின் காலம் வந்து விட்டதாக நான் கருதுகின்றேன். அவதூறு வழக்குகள் போடப்படாமல் இருக்கும் தலைவர் நான் மட்டும் தான். ’மக்கள் மன்றத்தில் கருத்துகளை சொல்லட்டும்... அவர்கள் முடிவு எடுக்கட்டும்’ என இருப்பவன் நான். 

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் அதை தடை செய்ய வேண்டும் என்ற கருத்தில் பாஜக உறுதியாக இருக்கிறது. ஆளுநர் சில கேள்விகள், சந்தேகங்களை எழுப்பி கேட்டிருப்பார். அதை மக்களிடம் சொல்ல வேண்டும். சட்டமன்றத்தில் இதை மீண்டும் தீர்மானமாக்கி கொடுத்தால் அதற்கு ஆளுநர் கண்டிப்பாக கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும். இந்த சட்டம் ஆளுநர் கையெழுத்து போட்டு அமலுக்கு வந்தாலும், அதற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு வர வாய்ப்பு இருக்கின்றது. யாரையோ சமாதானப்படுத்த இதை செய்கின்றனர். 234 எம்எல்ஏக்களும் இந்த மசோதாவை மறுபடியும் ஆராய்ந்து அதில் இருக்கும் பிரச்னைகளை விவாதிக்க வேண்டும். ஆளுநர் சும்மா திருப்பி அனுப்ப மாட்டார், எதாவது விளக்கம் கேட்டு இருப்பார். அது என்ன என்பதை தமிழக அரசும், சபாநாயகருக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் தெரியபடுத்த அதை வெளியிட வேண்டும். அது ஆரோக்கியமான விவாதங்களை ஏற்படுத்தும். 

image

தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வேறு வேறு கட்சியில் இருந்து பாஜகவில் இணைகின்றனர்.  கட்சியில் இணைவதும், வேறு கட்சிக்கு போவது எல்லாம் சகஜம். இரண்டாம் தர, மூன்றாம் தர, நான்காம் தர தலைவர்கள் வேறு கட்சியில் இணைந்தால் அது பெரிய செய்தியாக வருகிறது. அதை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்கின்றனர். திமுகவில் இருக்கும் பாதி அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் தான். இங்கிருந்து போபவர்களுக்கு நான் சொல்வது , நல்லாயிருங்கள். போகும் இடத்தில் விசுவாசமாக இருங்கள். அரசியலில் என்ன சாதிக்க வேண்டும் என நினைத்தீர்களோ அதை செய்யுங்கள். பாஜக ஐடி விங் என்பது உணர்வுபூர்வமாக வேலை செய்யும் இடம். இதில் பாஜகவின் அங்கமாக இல்லாதவர்தான் அதிகமாக இந்த ஐடி விங் வேலையை செய்கின்றனர். பா.ஜ.க உறுப்பினர் அட்டை கூட இல்லாதவர்கள் இந்த ஐடி விங் வேலையை உணர்வு பூர்வமாக செய்து கொண்டு இருப்பார்கள். 

பா.ஜ.கவில் இன்னும் ஒரு ஆறு மாதத்தில் பெரிய பெரிய தலைகள் கட்சியில் இருந்து வெளியில் செல்வதற்கும், பெரிய பெரிய தலைகள் இங்கு வருவதற்கும் வாய்ப்பு உண்டு. நாளை ஒரு எம்எல்ஏ வந்தால் கூட பாஜகவிற்கு வரலாம். அப்போதும் கூட இன்னொரு இடைதேர்தல் வேண்டுமா என பா.ஜ.க யோசிக்கும். புதிய ஆட்களை சேர்ப்பது அகில இந்திய கட்சிக்கு பெரிய விஷயமல்ல. இதனால் தமிழகத்திற்கு என்ன பயன் என்று யோசித்து செய்கின்றோம். கே எஸ் அழகிரியும், மு.க. ஸ்டாலினும் அமர்ந்து மனிஷ் சிசோடியா விவகாரம் குறித்து பேச வேண்டும். இதில் ஆளுக்கு ஒரு கருத்தினை வைத்திருக்கின்றனர்'' என அண்ணாமலை தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்