Published : 06,Mar 2023 07:24 AM

ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் உயிரிழந்த கர்ப்பிணி: மலைகிராம மக்கள் சாலை மறியல்

Pregnant-woman-dies-due-to-delay-in-arrival-of-ambulance-Villagers-stage-road-blockade

வாணியம்பாடி அருகே உள்ள மலை கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உரிய மருத்துவ வசதி இல்லாததே உயிரிழப்பு காரணம் என மலை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு எற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெலதிகாமணி பெண்டா பகுதியைச் சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி சரண்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சரண்யாவின் உறவினர்கள் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால், மலை கிராமத்தில் சாலை வசதி இருந்தும் ஆம்புலன்ஸ் 2மணி நேரம் தாமதமாக வந்துள்ளது. இந்நிலையில் கர்ப்பிணியான சரண்யா வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

image

இதனால் ஆத்திரமடைந்த மலைகிராம மக்கள் தங்களது கிராமத்தில் உரிய மருத்துவ வசதி இல்லாததே கர்ப்பிணி உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறி வாணியம்பாடி - ஆந்திர மாநிலம் குப்பம் சாலையில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர்.

image

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உடனடியாக கிராமத்திற்கு மருத்துவ வசதி செய்து தரப்படும் என உறுதியளித்தனர். இதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்